தேடல்

Sunday 12 February 2012

நான் சுவாசித்த அந்நியக் காற்று

( என் முதல் விமானப் பயணம் குறித்து எழுதியது )

சொந்தங்களைப் பிரிந்து,
சோகங்களை சுமந்தவனாய்..
வருவாய் தேடி - வானத்தை
வலம்  வரப் போகிறேன் .!



விமான நிலையத்தின்
வரம்புகளில் விடுவிக்கப்பட்டு,
விமானமருகில் நான்...




வானத்தை மட்டுமே,
பார்த்துப் பழகிய நானும்..
பறக்கப் போகிறேன்
விமானத்தில்...

ஆசையுடன் அடி எடுத்தேன் !
சன்னலோர இருக்கை
இல்லாததால் சலனம் மனதில்..




சிறு வயது
சேட்டைகளுக்குப் பிறகு,
இருக்கையுடன் இறுக்கிக் கட்டப்பட்டது,
இப்பொழுது தான் !

நான்
சிறகு விரித்த பறவையாய் பறக்க
சில வினாடிகள் மட்டுமே !




உறுமிய இரைச்சலுடன்,
ஓடிய ஆகாயக் கப்பல்..
உயரே பறந்தது
மெல்ல.. மெல்ல...
காதுகளும் அடைப்பட்டது - நேரம்
செல்ல.. செல்ல...
 


காலையில் நீர் தெளித்துப் போட்ட
கோலப் புள்ளிகளாய்,
சென்னை மாநகரம்..!

கட்டுகளில்
இருந்து விடுபட்ட,
கைதியாய் விடுதலையானேன்
தண்டனையிலிருந்து !

வங்கக் கடலைத் துறந்து..
அரபிக் கடலை அடைய...
விரைகிறது விமானம் !





தாய் மண்ணின்,
நினைவலைகளில் கரைகிறது காலம்...

அவசர ஆங்கிலத்தில் ஓர் அறிவிப்பு !
பத்தாயிரம் அடி உயரத்தில்
பறக்கிறதாம் விமானம்..
பதறுகிறது மனம்...




பவனி வரும்
பணிப்பெண்கள்,
பதார்த்தங்கள் பரிமாற்றம்..
பதறிய மனம் - இப்போது
படிப்படியான மாற்றம்...




காற்றை கிழித்து விமானம் செல்ல..
கனாவில் உறைந்தேன் மெல்ல...

அந்நிய மண்
அருகில் நெருங்க, நெருங்க
தாய் மண் - அந்நியமாய் !

ஆண்டுகளாய்,
ஆங்கிலேயனுக்கு அடிமைபட்டது
பற்றாகுறையாய் - கட்டப்பட்டேன்..
அடிமையாக இருக்கையோடு...
மீண்டும் தண்டனை !

உயரத்தில்
உல்லாசமாய் உலவிய
ஆகாயக் கப்பல்,
தரையில் தாவ ஆயத்தமாய்...

சீறிப் பாய்ந்து,
சிரிப்புடன் முத்தமிட்டது..
அந்நியத் தரையை !
இந்திய விமானம்





சில மணி நேர
சிறையிலிருந்து விடுபட்டவனாக
சுதந்திரமாய்  சுவாசித்தேன்
அந்நியக் காற்றை !

Saturday 4 February 2012

ஒப்பாரிகள் ஓராயிரம் - வரதட்சணை கொடுமை !



( மனைவியுடன் இணைந்து எழுதிய கவிதை )

கல்விக்கு
குரு தட்சணை.. அந்தக் காலம்.!
கலவிக்கு
வர தட்சணை .. இந்தக் காலம்.!

பெண்ணடிமைப் பிணியில் - வரதட்சணை
உயிர் கொல்லும் வைரஸ்..!




உடன் பிறந்த சகோதரிகளை
கரையேற்ற, கடல் கடந்து
உழைத்து, உருக்குலைந்து
வளைகுடாவில் வாலிபம் தொலைத்த
'முதிர் கண்ணன்கள்'
இன்றும் தேடித்திரிவது
மன நோயாளிகளாக
தொலைந்த இளமையை..

இருபது சவரன் படையலுக்கு,
அறுபது வயது மாப்பிள்ளை..
அறுபது சவரன் படியளந்தால்
இருபதிலும் மணக்கோலம்...




இங்கு
சவரன்களில் தான் சஞ்சரிக்கிறதோ ?
சத்திய மாங்கல்யங்கள் !

ஆண் மகவைப் பெற்றெடுத்து
அழுது புலம்பியவர் எவருமுண்டா ?
பொற்குவியல் விதைத்த
புன்னகையின் அறுவடைகள்..
கால் நூற்றாண்டாய் காத்திருக்கிறது..?
கணக்குப் போட்டு - விற்பனை முடிக்க !

ஆண் மகன்
கல்லூரி சென்றதால்,
கற்றதும் அதிகம்..
அதனால் பெற்றவர்கள்
கரன்சி நோட்டுகளாக,
பெற்றதும் அதிகம்...





மாட்டுச் சந்தையிலும்,
நடந்திடாத பேரம்..
மணப் பந்தலில்,
அரங்கேறும் அவலம்.!

அலங்கோலமாய் வீடு
அழுகுரல்களின் எதிரொலி
ஓ.. மாப்பிள்ளை வீட்டாரின் விஜயம் !


திருமணம்
முடிந்தும் தீரவில்லை - இன்னும்
தீர்க்கப்படாத
விற்பனை கணக்குகள் !
தற்காலிக தீர்ப்பு..
வாழா வெட்டி !
நிரந்தர தீர்ப்பு...
விவாகரத்து !




மாமியார் கொடுமை
ஒழிக்க களமிறங்கி,
வரதட்சணை வலையில் வீழ்ந்த பரிதாபம்...
கீழக்கரையில் 'வீட்டோடு மாப்பிள்ளை'!

'வரதட்சணை வேண்டாம்'
என்றவனுக்கும் வாயாரவாழ்த்தி வழங்கும்,
உயரிய விருது ..?
'உடலில் ஏதோ கோளாறு' !

இங்கு
திருமணங்கள்..
இலட்சத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது...
சுவர்க்கத்தில் அல்ல !




பெற்றோரின்
விற்பனை சந்தையில் சிறைபடுகிறது
ஆயுள் கைதியாய் - ஆண் மகனின் வாழ்க்கை..?
வீட்டோடு மாப்பிள்ளையாக !

ஆணடிமைச் சாத்திரங்கள் ஒழியப் பாட
இனியொரு பாரதி பிறப்பானா?