தேடல்

Wednesday 19 September 2012

மழை தேடும் மனிதர்கள் !

மனிதக் கோடாரிகள்
வெட்டி வீழ்த்திய
உயிரற்ற மரச் சடலங்கள்..
நம் வீடுகளில்
நிலைக் கதவுகளாய்
சன்னல்களாய்
தூண்களாய்
நாற்காலிகளாய்
நடவாகி நிற்கிறது...


இன்றாவது
தன் சந்ததியை
நடவு செய்ய மாட்டானா ?
என்ற ஏக்கத்தில்
மனிதனுக்கு
அடிமையாய்
அறம் புரியும்
மர ஆன்மாக்கள்..
மறந்தே போகிறது.!
தன்னைக் கொன்ற
மனித சந்நிதியை.?

ஆதியில்
விறகுக்காக
மரம் வெட்டிய
மனித கரங்கள்..
இன்று
வீம்புக்காகவும்
வெட்டுகிறது...

கானகங்கள்
களவாடப்பட்டதால்,
கார் மேகங்கள்
காணாமல் போனது..
மழை யென்னும்
மகத்துவம் கானல் நீரானது...


பருவ மழை தேடும்
விவசாயி கூட
பருவம் வந்ததும்
அறுவடை செய்கிறான்
பதறுகளை...
பருவ மழை பொய்த்ததால் !

நாகரீகம்
பற்ற வைத்த நெருப்பு
பசுமைகளை பொசுக்கியது..
பசுமை மறைந்ததால்
உயிர்மை விலகியது...

அருகிப் போன
காடுகளில்,
குறுகிப் போனது..
அரிய விலங்குகளின் விலாசங்கள் !

காரிருள் காடுகள்
கட்டாந்தரை ஆகியதால்,
காலாவதி ஆனது..
பறவைகளின் பிறப்பிடங்கள் !


மனிதன்
மரம் கொன்றான் - அதனால்
மழை கொன்றான்..
மனிதம் கொன்றான் - விரைவில்
மரணம் கொண்டான்...

மனிதன் இன்னும்
பணம் திண்ணப்
பழகாததால் - உலகில்
'பணப் பயிர்கள்' மட்டும்
நடவாகிறது - அதனால்
எங்கோ ஒரு சொட்டு
மழையாகிறது !


வறட்சியில்
கிணறுகள்
மழை தேடுகிறது..
தழைகள் கருகிய
தாவரங்கள்
தண்ணீர் தேடுகிறது..
தாகம் கொண்ட
தரணியின் தலையெழுத்து
இங்கு சப்தமில்லாமல் 
செதுக்கப்படுகிறது...
மழை துளிகளால்.!

இறைவன் நாடி,
ஆளுக்கொரு மரம் நட்டால்,
ஆயுளின் வரம் நிச்சயமாகும்..
ஆக்சிஜன் தரும் உத்திரவாதம்...

மரம் நடுவோம்.. மழை பெறுவோம்... 

Tuesday 4 September 2012

சுமை தாங்கியின் சுமைகள்

மங்கிய
பார்வையிலும்,
மழுங்கிய வார்த்தைகளாக..
நலிவை அடைந்து,
வலிமை இழந்து,
பொலிவைத் தொலைத்த..
ஒரு 'முதியவரின் அறைகூவல்'
இங்கு
கண்ணீர் துளிகளால்
நதியாகி நனைக்கிறது.!


காலம் களவாடிய மிச்சம் நான்..
காலன் உறவாடும் எச்சம் நான்...
சொந்தம் விரட்டிய சோதனை நான்..
பந்தம் துரத்தும் பரிதாபம் நான்...

நாடி தளர்ந்த,
வாழ்க்கையின் விளிம்பில்
நாதிகள் இல்லாத சாதியில் நான்...

வாலிப முறுக்கில்,
வாழ்வாதாரம் சேர்த்தேன் உறவுக்கு..
வயோதிக சறுக்கில்
வாழ்க்கை சக்கரம் சேர்த்தது - என்னை தெருவுக்கு.??


மழலையாய்
மார்பில் உதைத்த பிஞ்சுக் கால்கள்
மறுபடியும் உதைக்கிறது..
மரித்துப் போவென்று !

கொஞ்சி விளையாடி
குதூகளித்தப் பாசக் கரங்கள்
காத்து நிற்கிறது..
கொல்லப் போகிறேனென்று !

தவமாய் தவமிருந்து
பெற்றெடுத்த பிள்ளைகள்,
தத்துக் கொடுத்தது..
முதியோர் இல்லத்தில் !
அவர்கள் முடிவாய்
மறந்தே போனது ...
முன் பதிவில் - முதியோர் இல்லம்
தனக்கும் உண்டென்று .!?


சுண்டிப் போன
சரீரத்தின் சுழிவுகளில் - மண்டியிடும்
சோகங்கள் சாபங்களானால்
சரித்திரங்கள் - ஒரு நாள்
சாட்சிகளாகும் !

பெற்றவர்களை
தனிமையின் புழுக்கத்தில்
தவிக்க விட்டு,
கடல் தாண்டும் கணவான்கள்
பசிக்கும் கூட பிச்சையிடவில்லை.??


மகனே
சோறு வேண்டாம்.?
பாசம் தா..
பசித்தாலும் பிழைத்திருப்பேன்.!

முதியோர்
இல்லம் வேண்டாம்.?
இருட்டறையிலாவது
இருக்க ஓரிடம் தா..
இறந்தாலும் இன்பமாயிருப்பேன்..!

பிள்ளைகளோடு
களித்த கடைசி நிமிடங்களால்...

கேள்விக் குறியாய்,
வளைந்து போன - என் கூன் முதுகில்
இன்னும் ஏற்றப்படாத சுமைகள் எத்தனையோ ?

பெற்றோர் கண்ணீர்
துடையா பிள்ளைகள்,
அடையா சொர்க்கம்
அணுவளவும்..

பெற்றோர் பழிச்சொல்
பிள்ளைகளானால்,
அடையும் நரகம்
அனு தினமும்...



பெற்றோர் பேணுவோம்..
சொர்க்கம் காணுவோம்...