நிலவறையில் மீண்டு
நிலவு காட்டிய தாய்
தீட்டானால் இன்று...
படுக்க முடியாமல் புரண்டு
பல இரவு உறக்கம் தொலைத்து
பல ருசியும் உணவும் தவிர்த்து
குனிந்து பொருள் எடுக்க
முனையும் முன்னே
குடம் போல் வயிறும் தடுக்க
உதடு கடித்து வலி பொருத்து
குழந்தை ஈன்றவள்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டாள் இன்று...
பொன்னும் வைரமும் சொற்
பொருளில் பொதியா
மின்னும் பவளமும்
மிகுதியாய் முத்தும்
தந்தாலும் ஈடாக
தாயின் கருணை
முதியோர் இல்லத்தின் மூலையில் இன்று...
ஆயிரம் செய்யுள் உண்டு
ஆன்றோரின் வாக்கும் உண்டு
பாயிரம் புனைந்து நல்
பாடலில் பதிய வைத்தும்
கோயிலாய் ஒரு மதமும் தாய்
கொண்ட காலடி சொர்க்கம் என்றும் நல்
வாயிலால் நவின்று நின்றும்
தாய் தெருவில் நிற்கிறாள்
நாதியற்று இன்று....
உண்ணும் பருக்கையும்
உடுத்தும் உடுக்கையும்
மின்னும் உன் பொருளெல்லாம் உன்
தாயின் வரமன்றோ? மூடா!
கரு இருட்டறையில் இருந்து
ஈன்றவளுக்கு உன்
வீட்டின் இருட்டறையிலாவது
இடங்கொடு
இரந்தும் அவளுக்கு புகல் கொடு
இல்லையெனில் - தாய்
இறக்கும் முன் நீ
இறந்து விடு..!
ஆக்கம் : கவிஞர். நசீர் சுல்தான்
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...