நாளின் சரி பாதி..
போதை போக மீதி !
நள்ளிரவில்
நிரப்பிய போதை,
நகரும் முன்னே..
அதிகாலையே
அமர்க்களத்துடன்,
அமோக விற்பனையில்..
அதிரடி போதையாய் ஆரம்பம் !
முதல் குவளை,
கம்பீரமாக கரைகிறது..
அது வரை,
உண்மையை உணர்ந்த
உணர்வு தடுமாறுகிறது.!
இரண்டாம் குவளை,
நடுக்கமாக நனைகிறது..
அது வரை,
அறிவோடு அளாவிய
மனிதம் அகலுகிறது.!
மூன்றாம் குவளை,
உளறலாய் உறைகிறது...
இது வரை,
பகுத்தறிவு பேசிய
புனிதம் விடை பெறுகிறது.?
மிருகமாய்
மிரட்டும் முகம்..
அறிவினை
அடகு வைத்த அகம்...
பேசும் வார்த்தைகள்
எல்லாம் மெய்யாக..
வார்த்தை ஜாலங்கள்
எல்லாம் பொய்யாக...
மில்லியில்,
மக்கள் தொகை மில்லியனாய்..
மனிதர்கள் இரட்டையாய்...
பறப்பது பிரம்மையாக..
செலவில்லா விமானப் பயணம் !
குவளைகள்,
நான்கு.. ஐந்து.. ஆறு...
கம்பீரம், நடுக்கம்,
உளறலுடன் உருள்கிறது...
நூறுகளுக்கு
நிரப்பிய அறிவாளி..
கோடிகளை பற்றிய
கனாவில் முட்டாளாய்...
உச்ச போதையிலும்
உண்மையை உணர்ந்தவனாய்,
கண்ணீரோடு சத்தியம் செய்தான்
கடைசி குவளையென்று...
கையில் ஏந்தியவனாய்.!
மீண்டும்.. மீண்டும்..
சத்தியத்தோடு போதை.!
குடி மகனின் கடைசி மூச்சாய்....
No comments:
Post a Comment